Levítico 7

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 “குற்றநிவாரணபலியின் விதிமுறைகள் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது.

2 சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரணபலியும் கொல்லப்படவேண்டும்; அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

3 அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும்,

4 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறுகுடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக.

5 இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் யெகோவாவுக்குத் தகனபலியாக எரிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி.

6 ஆசாரியர்களில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது.

7 பாவநிவாரணபலி எப்படியோ குற்றநிவாரணபலியும் அப்படியே; அந்த இரண்டிற்கும் விதிமுறை ஒன்றே; அதினாலே பாவநிவிர்த்தி செய்த ஆசாரியனை அது சேரும்.

8 ஒருவருடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்.

9 அடுப்பிலே வேகவைக்கப்பட்டதும், பாத்திரத்திலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான உணவுபலி அனைத்தும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாக இருக்கும்.

10 எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல உணவுபலியும் ஆரோனுடைய மகன்கள் அனைவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்.

11 “யெகோவாவுக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் விதிமுறைகள் என்னவென்றால்,

12 அதை நன்றிபலியாகச் செலுத்துவானானால், அவன் நன்றிபலியோடுகூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன்.

13 அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதானபலியாகிய நன்றிபலியோடுகூட படைக்கவேண்டும்.

14 அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதானபலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும்.

15 சமாதானபலியாகிய நன்றிபலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றையதினமே சாப்பிடப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலம்வரை வைக்கப்படக்கூடாது.

16 அவன் செலுத்தும் பலி பொருத்தனையாகவோ உற்சாகபலியாகவோ இருக்குமானால், அது செலுத்தப்படும் நாளிலும், அதில் மீதியானது மறுநாளிலும் சாப்பிடப்படலாம்.

17 பலியின் மாம்சத்தில் மீதியாக இருக்கிறது மூன்றாம் நாளில் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது.

18 சமாதானபலியின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் சாப்பிடப்படுமானால், அது அங்கீகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைச் சாப்பிடுகிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

19 “தீட்டான எந்த பொருளிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது சாப்பிடப்படாமல் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்ற மாம்சத்தையோ சுத்தமாக இருக்கிறவனெவனும் சாப்பிடலாம்.

20 ஒருவன் தீட்டுள்ளவனாக இருக்கும்போது யெகோவாவுடைய சமாதானபலியின் மாம்சத்தைச் சாப்பிட்டால், அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடி வெட்டுண்டுபோவான்.

21 மனிதர்களுடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த பொருளையாவது ஒருவன் தொட்டிருந்து, யெகோவாவுடைய சமாதானபலியின் மாம்சத்திலே சாப்பிட்டால், அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோவான்” என்றார்.

22 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

23 “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால், மாடு, ஆடு, வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் சாப்பிடக்கூடாது.

24 தானாகச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், தாக்கப்பட்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவித வேலைகளுக்குப் பயன்படுத்தலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் சாப்பிடக்கூடாது.

25 யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைச் சாப்பிடுகிற எந்த ஆத்துமாவும் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோவான்.

26 உங்கள் குடியிருப்புகளில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது சாப்பிடக்கூடாது.

27 எவ்வித இரத்தத்தையாவது சாப்பிடுகிற எவனும் தன் மக்களில் இல்லாதபடி அறுப்புண்டுபோவான் என்று சொல்” என்றார்.

28 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

29 “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால், யெகோவாவுக்குச் சமாதானபலி செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானபலியைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவருவானாக.

30 யெகோவாவுக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவனே கொண்டுவரவேண்டும்; மார்புப்பகுதியையும் அதனுடன் அதின்மேல் வைத்த கொழுப்பையும் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக் கொண்டுவரக்கடவன்.

31 அப்பொழுது ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும்; மார்புப்பகுதி ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்.

32 உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப்படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக.

33 ஆரோனுடைய மகன்களில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்.

34 இஸ்ரவேல் மக்களின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்புப்பகுதியையும் ஏறெடுத்துப்படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்குள் இருக்கும் நிரந்தரமான கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார்.

35 “யெகோவாவுக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவனுடைய மகன்களும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம் செய்யப்பட்ட அவர்களுக்குக் யெகோவாவுடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை.

36 இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் மக்கள் தங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான நியமமாகக் கொடுக்கும்படிக் யெகோவா அவர்களை அபிஷேகம்செய்த நாளிலே கட்டளையிட்டார்.

37 சர்வாங்கதகனபலிக்கும் உணவுபலிக்கும் பாவநிவாரணபலிக்கும் குற்றநிவாரணபலிக்கும் பிரதிஷ்டைபலிகளுக்கும் சமாதானபலிகளுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே.

38 யெகோவாவுக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் மக்களுக்குச் சீனாய் வனாந்திரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய்மலையில் கட்டளையிட்டார்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Levítico 7, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.