Josué 11

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடமும், சிம்ரோனின் ராஜாவிடமும், அக்சாபின் ராஜாவிடமும்,

2 வடக்கே இருக்கிற மலைகளிலும் கின்னரேத்திற்குத் தெற்கே இருக்கிற நாட்டுப்புறத்திலும் சமபூமியிலும் மேற்கு எல்லையாகிய தோரிலும் இருக்கிற ராஜாக்களிடமும்,

3 கிழக்கேயும், மேற்கேயும் இருக்கிற கானானியர்களிடமும், மலைகளில் இருக்கிற எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், எபூசியர்களிடமும், எர்மோன் மலையின் அடியிலே மிஸ்பா தேசத்தில் இருக்கிற ஏவியர்களிடமும் ஆள் அனுப்பினான்.

4 அவர்கள் கடற்கரை மணலைப்போல ஏராளமான மக்களாகிய தங்களுடைய எல்லா சேனைகளோடும், ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடும் புறப்பட்டார்கள்.

5 இந்த ராஜாக்கள் எல்லோரும் கூடி, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்ய வந்து, மேரோம் என்கிற ஏரியின் அருகில் ஏகமாக முகாமிட்டார்கள்.

6 அப்பொழுது யெகோவா யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதே; நாளை இந்த நேரத்திலே நான் அவர்களையெல்லாம் இஸ்ரவேலுக்கு முன்பாக வெட்டப்பட்டவர்களாக ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களுடைய குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாய் என்றார்.

7 யோசுவாவும், அவனோடு யுத்த மக்கள் அனைவரும், திடீரென்று மேரோம் ஏரியின் அருகே இருக்கிற எதிரிகளிடம் வந்து, அவர்களைத் தாக்கினார்கள்.

8 யெகோவா அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறியடித்து, பெரிய சீதோன்வரைக்கும் மிஸ்ரபோத்மாயீம்வரைக்கும், கிழக்கே இருக்கிற மிஸ்பே பள்ளத்தாக்குவரைக்கும் துரத்தி, அவர்களில் ஒருவரும் மீதியில்லாதபடி, அவர்களை வெட்டிப்போட்டார்கள்.

9 யோசுவா யெகோவா தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து, அவர்களுடைய குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்களுடைய இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான்.

10 அக்காலத்திலே யோசுவா திரும்பி, ஆத்சோரைப் பிடித்து, அதின் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்; ஆத்சோர் முன்னே அந்த ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாக இருந்தது.

11 அதில் இருந்த உயிரினங்களையெல்லாம் பட்டயத்தினால் வெட்டி, அழித்துப்போட்டான்; சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை; ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான்.

12 அந்த ராஜாக்களுடைய எல்லாப் பட்டணங்களையும் அவைகளுடைய எல்லா ராஜாக்களையும் யோசுவா பிடித்து, பட்டயத்தினால் வெட்டி, யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துப்போட்டான்.

13 ஆனாலும் தங்களுடைய மேட்டின்மேல் இருந்த பட்டணங்களையெல்லாம் இஸ்ரவேலர்கள் சுட்டெரித்துப்போடாமல் வைத்தார்கள்; ஆத்சோரைமாத்திரம் யோசுவா சுட்டெரித்துப்போட்டான்.

14 அந்தப் பட்டணங்களிலுள்ள மிருகஜீவன்களையும் மற்றக் கொள்ளைப்பொருட்களையும் இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டார்கள்; ஆனாலும் எல்லா மனிதர்களையும் அழித்துப்போடும்வரைக்கும் அவர்களைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்; சுவாசமுள்ள ஒன்றையும் அவர்கள் மீதியாக வைக்கவில்லை.

15 யெகோவா தமது ஊழியக்காரனாகிய மோசேக்கு எப்படிக் கட்டளையிட்டிருந்தாரோ, அப்படியே மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தான்; அப்படியே யோசுவா செய்தான்; அவன், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டதில் ஒன்றையும் செய்யாமல் விடவில்லை.

16 இந்த விதமாக யோசுவா சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக் மலைதுவங்கி லீபனோனின் பள்ளத்தாக்கில் எர்மோன் மலையடியில் இருக்கிற பாகால்காத் வரையுள்ள அந்த முழு தேசமாகிய மலைகளையும், தென்தேசம் எல்லாவற்றையும், கோசேன் தேசத்தையும் சமனான பூமியையும், நாட்டுப்புறத்தையும், இஸ்ரவேலின் மலைகளையும் அதின் சமபூமியையும் பிடித்துக்கொண்டு,

17 அவைகளின் ராஜாக்களையெல்லாம் பிடித்து, அவர்களை வெட்டிக் கொன்றுபோட்டான்.

18 யோசுவா நீண்டநாட்களாக அந்த ராஜாக்கள் எல்லோரோடும் யுத்தம்செய்தான்.

19 கிபியோனின் குடிகளாகிய ஏவியர்களைத்தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் மக்களோடு சமாதானம் செய்யவில்லை; மற்ற எல்லாப் பட்டணங்களையும் யுத்தம்செய்து பிடித்தார்கள்.

20 யுத்தம்செய்ய இஸ்ரவேலுக்கு எதிராக வரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானதும், இப்படியே அவர்கள்மேல் இரக்கம் உண்டாகாமல், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துப்போட்டதும் யெகோவாவால் வந்த காரியமாக இருந்தது.

21 அக்காலத்திலே யோசுவா போய், மலைத்தேசமாகிய எபிரோனிலும் தெபீரிலும் ஆனாபிலும் யூதாவின் எல்லா மலைகளிலும் இருந்த ஏனாக்கியர்களை அவர்களுடைய பட்டணங்களோடு சேர்த்து அழித்தான்.

22 இஸ்ரவேல் மக்களின் தேசத்தில் ஏனாக்கியர்கள் ஒருவரும் மீதியாக வைக்கப்படவில்லை; காசாவிலும் காத்திலும் அஸ்தோத்திலும்மட்டும் சிலர் மீதியாக இருந்தார்கள்.

23 அப்படியே யோசுவா, யெகோவா மோசேயிடம் சொன்னபடியெல்லாம் முழு தேசத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலுக்கு, அவர்களின் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சொந்தமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாக இருந்தது.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Josué 11, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.