Jeremias 40

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 பாபிலோனுக்குக் கொண்டுபோவதற்கு எருசலேமிலும் யூதாவிலும் சிறைப்பிடித்து வைக்கப்பட்ட மக்களுக்குள் விலங்கிடப்பட்டிருந்த எரேமியாவைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் விடுதலையாக்கி ராமாவிலிருந்து அனுப்பிவிட்டபின்பு, எரேமியாவுக்கு யெகோவாவால் உண்டான வசனம்:

2 காவற்சேனாதிபதி எரேமியாவை வரவழைத்து, அவனை நோக்கி: உன் தேவனாகிய யெகோவா இந்த இடத்திற்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தார்.

3 தாம் சொன்னபடியே யெகோவா நடப்பித்துமிருக்கிறார்; நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்து, அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமற்போனீர்கள்; ஆகையால் உங்களுக்கு இந்தக் காரியம் வந்தது.

4 இப்போதும், இதோ, உன் கைகளில் இடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னுடன் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாகத் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்; என்னுடன் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாகத் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்திற்குப்போக உனக்கு நன்மையும் ஒழுங்குமாகத் தோன்றுகிறதோ அவ்விடத்திற்குப் போ என்றான்.

5 அவன் இன்னும் போகாமலிருக்கும்போது, அவன் இவனை நோக்கி: நீ பாபிலோன் ராஜா யூதா பட்டணங்களின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானுடைய மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவினிடத்திற்குத் திரும்பிப்போய், அவனுடன் மக்களுக்குள்ளே தங்கியிரு; இல்லாவிட்டால், எவ்விடத்திற்குப் போக உனக்கு சரியென்று தோன்றுகிறதோ, அவ்விடத்திற்குப் போ என்று சொல்லி, காவற்சேனாதிபதி அவனுக்கு வழிச்செலவையும் வெகுமதியையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டான்.

6 அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகீக்காமின் மகனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான மக்களுக்குள் அவனுடன் தங்கியிருந்தான்.

7 பாபிலோன் ராஜா அகீக்காமின் மகனாகிய கெதலியாவை தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோகாத குடிமக்களில் ஏழைகளான ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் அவனுடைய கண்காணிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற போர் வீரர்கள் அனைவரும் அவர்களுடைய மனிதரும் கேட்டபோது,

8 அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; யாரெனில், நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலும், கரேயாவின் மகன்களாகிய யோகனானும், யோனத்தானும், தன்கூமேத்தின் மகனாகிய செராயாவும், நெத்தோபாத்தியனாகிய ஏப்பாயின் மகன்களும், மாகாத்தியனான ஒருவனுடைய மகனாகிய யெசனியாவும் ஆகிய இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களுமே.

9 அப்பொழுது சாப்பானுடைய மகனாகிய அகீக்காமின் மகன் கெதலியா அவர்களையும் அவர்கள் மனிதரையும் நோக்கி: நீங்கள் கல்தேயரை பணிய பயப்படவேண்டாம், நீங்கள் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவை பணியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும்.

10 நானோவெனில், இதோ, நம்மிடத்தில் வருகிற கல்தேயரிடத்தில் பணியும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன்; நீங்களோ போய், திராட்சைரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து, உங்கள் பாண்டங்களில் வைத்து, உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று வாக்குக்கொடுத்துச் சொன்னான்.

11 மோவாபிலும் அம்மோன் மக்களிடத்திலும் ஏதோமிலும் எல்லா தேசங்களிலும் இருக்கிற யூதரும், பாபிலோன் ராஜா யூதாவில் சிலர் மீதியாயிருக்கக் கட்டளையிட்டானென்றும், சாப்பானுடைய மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவை அவர்கள்மேல் அதிகாரியாக்கினான் என்றும், கேட்டபோது,

12 எல்லா யூதரும் தாங்கள் துரத்தப்பட்ட எல்லா இடங்களிலுமிருந்து, யூதா தேசத்தில் கெதலியாவினிடத்தில் மிஸ்பாவுக்கு வந்து, திராட்சைரசத்தையும் பழங்களையும் அதிகமாகச் சேர்த்து வைத்தார்கள்.

13 அப்பொழுது கரேயாவின் மகனாகிய யோகனானும் வெளியில் இருந்த எல்லா போர் வீரர்களும் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்து,

14 உம்மைக் கொன்றுபோடுவதற்கு, அம்மோன் மக்களின் ராஜாவாகிய பாலிஸ் என்பவன், நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலை அனுப்பினானென்பதை நீர் அறியவில்லையோ என்றார்கள்; ஆனாலும் அகீக்காமின் மகனாகிய கெதலியா அவர்கள் வார்த்தையை நம்பவில்லை.

15 பின்னும் கரேயாவின் மகனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாகப் பேசி: நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட அனுமதிக்கவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீதியானவர்கள் அழியவும் அவன் உம்மை ஏன் கொன்றுபோடவேண்டும் என்றான்.

16 ஆனாலும் அகீக்காமின் மகனாகிய கெதலியா கரேயாவின் மகனாகிய யோகனானை நோக்கி: நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே; இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jeremias 40, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.