Jeremias 28

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நான்காம் வருடம் ஐந்தாம் மாதத்தில், அசூரின் மகனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி யெகோவாவுடைய ஆலயத்தில் ஆசாரியர்களும் எல்லா மக்களும் பார்த்திருக்க என்னை நோக்கி:

2 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், பாபிலோன் ராஜாவின் நுகத்தை முறித்தேன்.

3 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இவ்விடத்திலிருந்து எடுத்து பாபிலோனுக்குக் கொண்டுபோன யெகோவாவுடைய ஆலயத்தின் பணிப்பொருட்களையெல்லாம் நான் இரண்டு வருடகாலத்தில் இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவரச்செய்வேன்.

4 யோயாக்கீமின் மகனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்ட யூதர் அனைவரையும் நான் இவ்விடத்திற்குத் திரும்பிவரச்செய்வேன்; பாபிலோன் ராஜாவின் நுகத்தை உடைப்பேன் என்றார் என்று சொன்னான்.

5 அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி ஆசாரியர்கள் பார்த்திருக்கவும், யெகோவாவுடைய ஆலயத்தில் நின்றிருந்த மக்களெல்லோரும் பார்த்திருக்கவும் அனனியா தீர்க்கதரிசியை நோக்கி:

6 ஆமென், யெகோவா அப்படியே செய்வாராக; யெகோவாவுடைய ஆலயத்தின் பணிப்பொருட்களையும் சிறைப்பட்டுப்போன அனைவரையும் பாபிலோனிலிருந்து திரும்பிவரச்செய்வாரென்று நீ தீர்க்கதரிசனமாகச் சொன்ன உன் வார்த்தைகளைக் யெகோவா நிறைவேற்றுவாராக.

7 ஆனாலும், உன் காதுகளும் எல்லா மக்களின் காதுகளும் கேட்க நான் சொல்லும் வார்த்தையைக் கேள்.

8 பூர்வகாலமுதல் எனக்குமுன்னும் உனக்குமுன்னும் இருந்த தீர்க்கதரிசிகள் அநேகம் தேசங்களுக்கு விரோதமாகவும், பெரிய ராஜ்யங்களுக்கு விரோதமாகவும், போரையும் பஞ்சத்தையும் கொள்ளைநோயையும்குறித்துத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

9 சமாதானம் வரும் என்று தீர்க்கதிரிசி தீர்க்கதரிசனம் சொல்லியிருக்க, அந்தத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்படியே வந்தால், அப்பொழுது அவன் யெகோவா மெய்யாக அனுப்பின தீர்க்கதரிசியாக விளங்குவானென்று எரேமியா தீர்க்கதரிசி சொன்னான்.

10 அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.

11 பின்பு அனனியா எல்லா மக்களுக்கு முன்பாகவும்: இந்தப் பிரகாரமாக இரண்டு வருடகாலத்தில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தை எல்லா மக்களின் கழுத்துகளிலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியே போனான்.

12 அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்துப்போட்ட பிற்பாடு, யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:

13 நீ போய், அனனியாவை நோக்கி: நீ மர நுகத்தை உடைத்தாய்; அதற்குப் பதிலாக இரும்பு நுகத்தை உண்டாக்கு என்று யெகோவா சொன்னார்.

14 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைப் பணியும்படிக்கு இரும்பு நுகத்தை இந்த எல்லா தேசத்து மக்களுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்.

15 பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள்; யெகோவா உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த மக்களைப் பொய்யை நம்பச் செய்தாய்.

16 ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இல்லாமல் அகற்றிவிடுவேன்; இந்த வருடத்தில் நீ இறந்துபோவாய் என்று யெகோவா சொல்லுகிறார்; யெகோவாவுக்கு விரோதமாய்க் கலகம் ஏற்படப் பேசினாயே என்றான்.

17 அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருடத்தில்தானே ஏழாம் மாதத்தில் இறந்துபோனான்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jeremias 28, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.