Jeremias 11

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:

2 நீங்கள் கேட்டு யூதாவின் மனிதருக்கும் எருசலேமின் குடிமக்களுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன:

3 என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்;

4 நான் உங்கள் முற்பிதாக்களை இரும்புச் சூளையாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த நாளில் அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனிதன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறாரென்று அவர்களுக்குச் சொல்.

5 இன்றையதினம் இருக்கிறதுபோல, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களுக்குச் சொன்ன வாக்கை நான் உறுதிப்படுத்த இப்படி ஆகும் என்றார்; அதற்கு நான் மறுமொழியாக, அப்படியே ஆகக்கடவது யெகோவாவே என்றேன்.

6 அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: நீ யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நீங்கள் கேட்டு, அவைகளின்படியே செய்யுங்கள்.

7 நான் உங்கள் முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து வரவழைத்த நாள்முதல், இந்நாள்வரை நான் அவர்களுக்கு உறுதியான சாட்சியாய் என் சத்தத்தைக் கேளுங்களென்று ஏற்கனவே சாட்சி விளங்கும்விதமாக எச்சரித்துவந்தேன்.

8 ஆனாலும் அவர்கள் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், அவரவர் தம்தம் பொல்லாத இருதயக் கடினத்தின்படி நடந்தார்கள்; ஆதலால் நான் அவர்கள் செய்யும்படி கட்டளையிட்டதும், அவர்கள் செய்யாமற்போனதுமான இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குப் பலிக்கச்செய்வேன் என்று சொல் என்றார்.

9 மேலும் யெகோவா என்னை நோக்கி: யூதாவின் மனிதருக்குள்ளும் எருசலேமின் குடிமக்களுக்குள்ளும் ஒரு கட்டுப்பாடு காணப்படுகிறது.

10 அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோமென்று அந்நிய தெய்வங்களைச் சேவிக்க அவைகளைப் பின்பற்றி, தங்களுடைய முன்னோர்களின் அக்கிரமங்களுக்குத் திரும்பினார்கள்; நான் தங்கள் பிதாக்களுடன் செய்த உடன்படிக்கையை இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா குடும்பத்தாரும் மீறிப்போட்டார்கள்.

11 ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரச்செய்வேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

12 அப்பொழுது யூதா பட்டணங்களின் மனிதரும், எருசலேமின் குடிகளும் போய் தாங்கள் தூபங்காட்டியிருந்த தெய்வங்களை நோக்கிக் கூப்பிட்டும், அவைகள் அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் அவர்களை காப்பாற்றுவதில்லை.

13 யூதாவே, உன் பட்டணங்களின் எண்ணிக்கையும் உன் தெய்வங்களின் எண்ணிக்கையும் சரி; எருசலேமுடைய வீதிகளின் எண்ணிக்கையும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த வெட்கமான காரியத்திற்கு ஸ்தாபித்த பீடங்களின் எண்ணிக்கையும் சரி.

14 ஆதலால் நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம், அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம்; அவர்கள் தங்கள் ஆபத்தில் என்னை நோக்கிக் கூப்பிடும்போது நான் அவர்களைக் கேளாதிருப்பேன்.

15 தீயவருடன் மகா தீமை செய்யும்போது, என் பிரியமானவளுக்கு என் வீட்டில் என்ன இருக்கிறது? பரிசுத்த மாம்சத்தை உன்னைவிட்டுத் தாண்டிப்போகச்செய்வார்கள்; உன் பொல்லாப்பு நடக்கும்போது நீ சந்தோசப்படுகிறாயே.

16 நல்ல பழம் இருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பெயரைக் யெகோவா உனக்குச் சூட்டினார்; ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக் கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது.

17 பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினால் எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்புக்காக உன்மேல் தீங்கை வரச்செய்வேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

18 அதை யெகோவா எனக்கு அறிவித்ததினால் அறிந்துகொண்டேன்; அவர்களுடைய செய்கைகளை அப்பொழுது எனக்குத் தெரிவித்தார்.

19 மரத்தை அதின் பழங்களுடன் அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும் அவன் பெயர் இனி நினைக்கப்படாமலும்போக அவனை அழிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனை செய்தார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.

20 சேனைகளின் யெகோவாவே, உள்ளத்தின் எண்ணங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதி செய்கிறதைப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன்.

21 ஆதலால் நீ எங்கள் கையினால் இறக்காமல் இருக்க யெகோவாவுடைய பெயரைக்கொண்டு தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் உயிரை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனிதரைக்குறித்துக் யெகோவா சொல்லுகிறார்:

22 இதோ, இதற்காக உங்களை விசாரிப்பேன்; இளவயதுள்ளவர்கள் பட்டயத்தால் இறப்பார்கள்; அவர்கள் மகன்களும் அவர்கள் மகள்களும் பஞ்சத்தால் இறப்பார்கள்.

23 அவர்களில் மீதியாய் இருப்பவர்கள் இல்லை; நான் ஆனதோத்தின் மனிதரை விசாரிக்கும் வருடத்தில் அவர்கள்மேல் ஆபத்தை வரச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jeremias 11, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.