Isaías 9

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாக துன்பப்படுத்தின ஆரம்ப காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் மத்திய தரைக் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள அந்நியமக்களுடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.

2 இருளில் நடக்கிற மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.

3 அந்த மக்களைப் பெருகச்செய்து, அதற்கு மகிழ்ச்சியையும் பெருகச்செய்தீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளும்போது களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள்.

4 மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்களுடைய தோளின்மேலிருந்த மரத்துண்டையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.

5 தீவிரமாகப் போர்செய்கிற வீரர்களுடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்டஆடைகள் நெருப்பிற்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும்.

6 நமக்காக ஒரு குழந்தை பிறந்தது; நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் பெயர் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

7 தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய அரசாட்சியையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்துவதற்காக அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்திற்கும், அதின் சமாதானத்திற்கும் முடிவில்லை; சேனைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

8 ஆண்டவர் யாக்கோபுக்கு ஒரு வார்த்தையை அனுப்பினார்; அது இஸ்ரவேலின்மேல் இறங்கியது.

9 செங்கல்கட்டு இடிந்துபோனது, விழுந்த கற்களாலே திரும்பக் கட்டுவோம்; காட்டத்திமரங்கள் வெட்டிப்போடப்பட்டது, அவைகளுக்குப் பதிலாகக் கேதுருமரங்களை வைப்போம் என்று,

10 அகந்தையும், மனப்பெருமையுமாகச் சொல்கிற எப்பிராயீமரும், சமாரியாவின் குடிமக்களுமாகிய எல்லா மக்களிடத்திற்கும் அது தெரியவரும்.

11 ஆதலால் யெகோவா ரேத்சீனுடைய எதிரிகளை அவர்கள்மேல் உயர்த்தி, அவர்களுடைய மற்ற எதிரிகளை அவர்களுடன் கூட்டிக் கலப்பார்.

12 முற்புறத்தில் சீரியரும், பிற்புறத்தில் பெலிஸ்தரும் வந்து, இஸ்ரவேலைத் திறந்தவாயால் அழிப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

13 மக்கள் தங்களை அடிக்கிற தேவனிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் யெகோவாவை தேடாமலும் இருக்கிறார்கள்.

14 ஆகையால் யெகோவா இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார்.

15 மூப்பனும் கனம்பொருந்தினவனுமே தலை, பொய்ப்போதகம்செய்கிற தீர்க்கதரிசியே வால்.

16 இந்த மக்களை நடத்துகிறவர்கள் ஏமாற்றுக்காரர்களாகவும், அவர்களால் நடத்தப்படுகிறவர்கள் நாசமடைகிறவர்களுமாக இருக்கிறார்கள்.

17 ஆதலால், ஆண்டவர் அவர்கள் வாலிபர்மேல் பிரியமாயிருப்பதில்லை; அவர்களிலிருக்கிற திக்கற்ற பிள்ளைகள்மேலும் விதவைகள்மேலும் இரங்குவதுமில்லை; அவர்கள் அனைவரும் மாயக்காரரும் பொல்லாதவர்களுமாயிருக்கிறார்கள்; எல்லா வாயும் மோசமானதைப் பேசும்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

18 மோசமானது அக்கினியைப்போல எரிகிறது; அது முட்செடியையும் நெரிஞ்சிலையும் பட்சிக்கும், அது நெருங்கிய காட்டைக் கொளுத்தும், புகை திரண்டு எழும்பும்.

19 சேனைகளின் யெகோவாவுடைய கோபத்தால் தேசம் அந்தகாரப்பட்டு, மக்கள் அக்கினிக்கு இரையாவார்கள்; ஒருவனும் தன் சகோதரனைத் தப்பவிடமாட்டான்.

20 வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் சாப்பிட்டாலும் திருப்தியடையமாட்டார்கள்; அவனவன் தன்தன் பிள்ளைகளின் மாம்சத்தைத் தின்பான்.

21 மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் அழிப்பார்கள்; இவர்கள் அனைவரும் யூதாவுக்கு விரோதமாயிருப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Isaías 9, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.