Isaías 59

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 இதோ, காப்பாற்றமுடியாதபடிக்குக் யெகோவாவுடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கமுடியாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.

2 உங்களுடைய அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினையை உண்டாக்குகிறது; உங்களுடைய பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடுக்க முடியாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.

3 ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது; உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது.

4 நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.

5 கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் வலைகளை நெய்கிறார்கள்; அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்; அவைகள் உடைக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும்.

6 அவைகளின் நெசவுகள் ஆடைகளுக்கேற்றவைகள் அல்ல; தங்கள் செயல்களாலே தங்களை மூடிக்கொள்ளமாட்டார்கள்; அவர்களுடைய செயல்கள் அக்கிரம செயல்கள்; கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது.

7 அவர்களுடைய கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதற்கு விரைகிறது; அவர்களுடைய நினைவுகள் அக்கிரம நினைவுகள்; பாழாகுதலும் அழிவும் அவர்களுடைய வழிகளிலிருக்கிறது.

8 சமாதான வழியை அறியமாட்டார்கள்; அவர்களுடைய நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியமாட்டான்.

9 ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்திற்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்திற்குக் காத்திருந்தோம், ஆனாலும் இருளிலே நடக்கிறோம்.

10 நாங்கள் குருடரைபோல் சுவரைப்பிடித்து, கண் இல்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழான இடங்களில் இருக்கிறோம்.

11 நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்திற்குக் காத்திருந்தோம், அதைக் காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமானது.

12 எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாகச் சாட்சி சொல்கிறது; எங்கள் மீறுதல்கள் எங்களுடன் இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.

13 யெகோவாவுக்கு விரோதமாகத் துரோகம்செய்து, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கச்செய்தோம்.

14 நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாக நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்துசேரமுடியாமற்போகிறது.

15 சத்தியம் தள்ளுபடியானது; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் யெகோவா பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார்.

16 ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம்செய்கிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.

17 அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் தலைக்கவசத்தைத் தமது தலையில் அணிந்து, நீதி நிலைநாட்டுதல் என்னும் ஆடைகளை உடுப்பாக அணிந்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்.

18 செயல்களுக்குத்தக்க பலனை கொடுப்பார்; தம்முடைய எதிரிகளிடத்தில் உக்கிரத்தைச் சரிக்கட்டி, தம்முடைய பகைவர்களுக்குத்தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார்.

19 அப்பொழுது சூரியன் மறையும் திசைதொடங்கி யெகோவாவின் நாமத்திற்கும், சூரியன் உதிக்கும்திசை தொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் எதிரி வரும்போது, யெகோவாவுடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாகக் கொடியேற்றுவார்.

20 மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று யெகோவா சொல்கிறார்.

21 உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று யெகோவா சொல்கிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று யெகோவா சொல்கிறார்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Isaías 59, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.