Isaías 51

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 நீதியைப் பின்பற்றி யெகோவாவை தேடுகிறவர்களாகிய நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட கிணற்றின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.

2 உன்னுடைய தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கும்போது நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகச்செய்தேன்.

3 யெகோவா சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவர் அதின் பாழான இடங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்திரத்தை ஏதேனைப்போலவும், அதின் காலியான இடத்தைக் யெகோவாவின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் பாடலின் சத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

4 என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் மக்களே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை மக்களின் வெளிச்சமாக நிறுவுவேன்.

5 என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு வெளிப்படும்; என் புயங்கள் மக்களை நியாயந்தீர்க்கும்; தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்.

6 உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோகும், பூமி ஆடையைப்போல் பழையதாகும்; அதின் குடிமக்களும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.

7 நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனிதர்களின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.

8 பொட்டுப்பூச்சி அவர்களை ஆடையைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுரோமத்தைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்.

9 எழும்பு, எழும்பு, பெலன்கொள்; யெகோவாவின் புயமே, ஆரம்ப நாட்களிலும் முந்தின தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?

10 மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய கடலை வற்றிப்போகச்செய்ததும், மீட்கப்பட்டவர்கள் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினதும் நீதானல்லவோ?

11 அப்படியே யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.

12 நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனிதனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின யெகோவாவை மறக்கிறதற்கும் நீ யார்?

13 துன்பம் செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய கடுங்கோபத்திற்கு எப்போதும் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? துன்பம் செய்கிறவனுடைய கடுங்கோபம் எங்கே?

14 சிறைப்பட்டுப்போனவன் துரிதமாக விடுதலையாவான்; அவன் குழியிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை.

15 உன் தேவனாயிருக்கிற யெகோவா நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாக கடலைக் குலுக்குகிற சேனைகளின் யெகோவா என்கிற நாமமுள்ளவர்.

16 நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் மக்கள்கூட்டமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.

17 எழும்பு, எழும்பு, யெகோவாவுடைய கடுங்கோபத்தின் பாத்திரத்தை அவருடைய கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.

18 அவள் பெற்ற மக்கள் அனைவருக்குள்ளும் அவளை நடத்துவார் ஒருவருமில்லை; அவள் வளர்த்த மகன்கள் எல்லோரிலும் அவளைக் கைகொடுத்து அழைப்பார் ஒருவருமில்லை.

19 இவ்விரண்டும் உனக்குச் சம்பவித்தது; உன்னை ஆறுதல்படுத்துகிறவன் யார்? பாழாகுதலும், அழிவும், பஞ்சமும், பட்டயமும் வந்தன; யாரைக்கொண்டு உன்னை ஆறுதல்படுத்துவேன்?

20 உன் மகன்கள் தளர்ந்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்கிய கலைமானைப்போல, அனைத்து வீதிகளின் முனையிலும், யெகோவாவுடைய கடுங்கோபத்தினாலும், உன் தேவனுடைய கடிந்துகொள்ளுதலினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள்.

21 ஆகையால் சிறுமைப்பட்டவளே, மதுபானங்குடிக்காமல் வெறிகொண்டவளே, நீ கேள்.

22 கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய மக்களுக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்கிறது என்னவென்றால்: இதோ, தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் கடுங்கோபத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை.

23 உன்னை நோக்கி: நாங்கள் கடந்துபோகும்படிக்குக் குனியென்று சொல்லி, கடந்துபோகிறவர்களுக்கு நீ உன் முதுகைத் தரையும் வீதியுமாக்கும்படி, உன்னைச் சஞ்சலப்படுத்தினவர்களின் கையில் அதைக் கொடுப்பேன் என்றார்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Isaías 51, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.