Isaías 11

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.

2 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய யெகோவாவுடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.

3 யெகோவாவுக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,

4 நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வார்த்தையாகிய கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரை அழிப்பார்.

5 நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.

6 அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடு படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒன்றாக இருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.

7 பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒன்றாகப் படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.

8 பால் குடிக்கும் குழந்தை விரியன்பாம்புப் புற்றின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்.

9 என் பரிசுத்த மலையெங்கும் தீமை செய்வாருமில்லை; கெடுதல் செய்வாருமில்லை; சமுத்திரம் தண்ணீனால் நிறைந்திருக்கிறதுபோல, பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

10 அக்காலத்திலே, மக்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக மக்கள்கூட்டம் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தங்கும் இடம் மகிமையாயிருக்கும்.

11 அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், தூரமான கடலிலுள்ள தீவுகளிலும், தம்முடைய மக்களில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்முறை தமது கரத்தை நீட்டி,

12 மக்களுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.

13 எப்பிராயீமின் பொறாமை நீங்கும், யூதாவின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள்; எப்பிராயீம் யூதாவின்மேல் பொறாமையாக இருக்கமாட்டான், யூதா எப்பிராயீமைத் துன்பப்படுத்தமாட்டான்.

14 அவர்கள் இருவரும் ஒன்றாகக்கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து, கிழக்குத்திசையாரைக் கொள்ளையிட்டு, ஏதோமின்மேலும் மோவாபின்மேலும் போரிடுவார்கள்; அம்மோன் மக்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள்.

15 எகிப்தின் சமுத்திரமுனையைக் யெகோவா முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலிமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழு ஆறுகளாகப் பிரித்து, மக்கள் கால் நனையாமல் கடந்துபோகச் செய்வார்.

16 இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் அவர்களுக்கு இருந்ததுபோல, அசீரியாவிலே அவருடைய மக்களில் மீதியானவர்களுக்கு ஒரு பெரும்பாதையிருக்கும்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Isaías 11, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.