Gênesis 38

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 அக்காலத்திலே யூதா தன் சகோதரர்களை விட்டு, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச் சேர்ந்தான்.

2 அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய மகளைக் கண்டு, அவளைத் திருமணம்செய்து, அவளோடு உறவுகொண்டான்.

3 அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; அவனுக்கு ஏர் என்று பெயரிட்டான்.

4 அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பெயரிட்டாள்.

5 அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு சேலா என்று பெயரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.

6 யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைத்தான்.

7 யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாதவனாக இருந்ததால், யெகோவா அவனை அழித்துப்போட்டார்.

8 அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: “நீ உன் அண்ணன் மனைவியைச் சேர்ந்து, அவளுக்கு மைத்துனனுக்குரிய கடமையைச் செய்து, உன் அண்ணனுக்கு சந்ததியை உண்டாக்கு” என்றான்.

9 அந்த சந்ததி தன் சந்ததியாக இருக்காதென்று ஓனான் அறிந்ததால், அவன் தன் அண்ணனுடைய மனைவியைச் சேரும்போது, தன் அண்ணனுக்கு சந்ததி உண்டாகாதபடித் தன் விந்தைத் தரையிலே விழவிட்டான்.

10 அவன் செய்தது யெகோவாவுடைய பார்வைக்குப் பொல்லாததாக இருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.

11 அப்பொழுது யூதா, தன் மகனாகிய சேலாவும் அவனுடைய சகோதரர்கள் இறந்ததுபோல இறப்பான் என்று பயந்து, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: “என் மகனாகிய சேலா பெரியவனாகும்வரைக்கும், நீ உன் தகப்பன் வீட்டில் விதவையாகத் தங்கியிரு” என்று சொன்னான்; அதன்படியே தாமார் போய்த் தன் தகப்பனுடைய வீட்டிலே தங்கியிருந்தாள்.

12 அநேகநாட்கள் சென்றபின், சூவாவின் மகளாகிய யூதாவின் மனைவி இறந்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க் கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்.

13 அப்பொழுது: “உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார்” என்று தாமாருக்குத் தெரிவிக்கப்பட்டது.

14 சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டதால், தன் விதவைக்குரிய ஆடைகளை மாற்றி, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.

15 யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்ததால், அவள் ஒரு விலைமாது என்று நினைத்து,

16 அந்த வழியாக அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: “நான் உன்னிடத்தில் சேர வருவாயா” என்றான்; அதற்கு அவள்: “நீர் என்னிடத்தில் சேருவதற்கு, எனக்கு என்ன தருவீர்” என்றாள்.

17 அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன்” என்றான். அதற்கு அவள்: “நீர் அதை அனுப்பும்வரைக்கும் ஒரு அடைமானம் கொடுப்பீரா” என்றாள்.

18 அப்பொழுது அவன்: “நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும்” என்று கேட்டான். அதற்கு அவள்: “உம்முடைய முத்திரை மோதிரமும், அதனுடைய கயிறும், உம்முடைய கைத்தடியையும் கொடுக்கவேண்டும்” என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி,

19 எழுந்துபோய், தன் முக்காட்டை மாற்றி, தன் விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டாள்.

20 யூதா அந்த பெண்ணிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டுவர அதுல்லாம் ஊரானாகிய தன் நண்பனிடம் ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல்,

21 அந்த இடத்தின் மனிதர்களை நோக்கி: “வழியிலே நீரூற்றுகள் அருகே இருந்த விலைமாது எங்கே” என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: “இங்கே விலைமாது இல்லை” என்றார்கள்.

22 அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: “அவளைக் காணவில்லை, அங்கே விலைமாது இல்லையென்று அந்த இடத்து மனிதர்களும் சொல்லுகிறார்கள்” என்றான்.

23 அப்பொழுது யூதா: “இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு வெட்கம் உண்டாகாதபடி, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும்” என்றான்.

24 ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்செய்தாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: “அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான்.

25 அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்திற்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும், கயிறும், இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும்” என்று சொல்லி அனுப்பினாள்.

26 யூதா அவைகளை அடையாளம்கண்டு: “என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் மகனாகிய சேலாவுக்குக் கொடுக்காமற்போனேனே” என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை.

27 அவளுக்குப் பிரசவநேரம் வந்தபோது, அவளுடைய கர்ப்பத்தில் இரட்டைப்பிள்ளைகள் இருந்தன.

28 அவள் பிரசவிக்கும்போது, ஒரு குழந்தை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதன் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, “இது முதலாவது வெளிப்பட்டது” என்றாள்.

29 அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: “நீ மீறிவந்தது என்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும்” என்றாள்; அதனால் அவனுக்குப் பாரேஸ் என்று பெயரிடப்பட்டது.

30 பின்பு கையில் சிவப்புநூல் கட்டப்பட்டிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பெயரிடப்பட்டது.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Gênesis 38, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.