Ezequiel 42

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 பின்பு அவர் என்னை வடதிசையின் வழியாக வெளிமுற்றத்திலே புறப்படச்செய்து, பிரத்தியேகமான இடத்திற்கு எதிராகவும், மாளிகைக்கு எதிராகவும் வடக்கே இருந்த அறைவீடுகளுக்கு என்னை அழைத்துக்கொண்டுபோனார்.

2 நூறு முழ நீளத்திற்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அந்த இடத்தின் அகலம் ஐம்பது முழம்.

3 உள்முற்றத்தில் இருந்த இருபது முழத்திற்கு எதிராகவும் வெளிமுற்றத்தில் இருந்த தளவரிசைக்கு எதிராகவும் ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளுள்ள மரநடை மேடைகள் இருந்தது.

4 உள்பக்கத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும், ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது; அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது.

5 உயர இருந்த அறைவீடுகள் அகலம் குறைவாக இருந்தது; நடை மரகூரைகள் கீழே இருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவே இருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாக இருந்தது.

6 அவைகள் மூன்று அடுக்குகளாக இருந்தது; முற்றங்களின் தூண்களுக்கு இருந்ததுபோல, அவைகளுக்குத் தூண்களில்லை; ஆகையால் தரையிலிருந்து அளக்க, அவைகள் கீழேயும் நடுவேயும் இருக்கிறவைகளைவிட அகலம் குறைவாக இருந்தது.

7 வெளியே அறைவீடுகளுக்கு எதிரே வெளிமுற்றத் திசையில் அறைவீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.

8 வெளிமுற்றத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் ஐம்பது முழம், தேவாலயத்திற்கு முன்னே நூறு முழமாக இருந்தது.

9 கிழக்கே வெளிமுற்றத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் நுழைகிற நடை அவைகளின் கீழே இருந்தது.

10 கீழ்த்திசையான முற்றத்து மதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்திற்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது.

11 அவைகளுக்கு முன்னான வழியிலே அந்த அறைவீடுகள் நீளத்திலும் அகலத்திலும், எல்லா வாசற்படிகளிலும், திட்டங்களிலும், வாசல் நடைகளிலும் வடதிசையான அறைவீடுகளின் சாயலாக இருந்தது.

12 தென்திசையான அறைவீடுகளின் வாசல் நடைக்கு ஒப்பாக ஒரு வாசல் நடைவழியின் முகப்பில் இருந்தது; கிழக்கு திசையில் அவைகளுக்குப் நுழையும் இடத்திலே ஒழுங்கான மதிலின் எதிரே இருந்த வழியின் முகப்பில் ஒரு வாசல் இருந்தது.

13 அவர் என்னை நோக்கி: பிரத்தியேகமான இடத்திற்கு முன்பாக இருக்கிற வடக்குப் பக்கமான அறைவீடுகளும், தெற்குப் பக்கமான அறைவீடுகளும், பரிசுத்த அறைவீடுகளாக இருக்கிறது; கர்த்தரிடத்தில் சேருகிற ஆசாரியர்கள் அங்கே மகா பரிசுத்தமானதையும் உணவுபலியையும், பாவநிவாரண பலியையும், குற்றநிவாரண பலியையும் வைப்பார்கள்; அந்த இடம் பரிசுத்தமாக இருக்கிறது.

14 ஆசாரியர்கள் உள்ளே நுழையும்போது, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளிமுற்றத்திற்கு வராததற்கு முன்னே, அங்கே தாங்கள் ஆராதனை செய்து, அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றிவைப்பார்கள்; அந்த ஆடைகள் பரிசுத்தமானவைகள்; வேறே ஆடைகளை அணிந்துகொண்டு, மக்களின் முற்றத்திலே போவார்கள் என்றார்.

15 அவர் உள்வீட்டை அளந்து முடிந்தபின்பு, கிழக்கு திசைக்கு எதிரான வாசல்வழியாக என்னை வெளியே அழைத்துக்கொண்டுபோய், அதைச் சுற்றிலும் அளந்தார்.

16 கிழக்குதிசைப் பக்கத்தை அளவுகோலால் அளந்தார்; அது அளவுகோலின்படியே சுற்றிலும் ஐந்நூறு கோலாக இருந்தது.

17 வடக்கு திசைப்பக்கத்தை அளவுகோலால் சுற்றிலும் ஐந்நூறு கோலாக அளந்தார்.

18 தெற்கு திசைப்பக்கத்தை அளவு கோலால் ஐந்நூறு கோலாக அளந்தார்.

19 மேற்கு திசைப் பக்கத்திற்குத் திரும்பி அதை அளவுகோலால் ஐந்நூறு கோலாக அளந்தார்.

20 நான்கு பக்கங்களிலும் அதை அளந்தார்; பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசப்படுத்தும்படிக்கு அதற்கு ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான மதில் சுற்றிலும் இருந்தது.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Ezequiel 42, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.