Êxodo 26

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 “மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும், இளநீலநூலினாலும், இரத்தாம்பரநூலினாலும், சிவப்பு நூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் ஆசரிப்பு கூடாரத்தை உண்டாக்கு; அவைகளில் விசித்திர பின்னல்வேலையாகக் கேருபீன்களைச் செய்.

2 ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும், நான்கு முழ அகலமுமாக இருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாக இருக்கவேண்டும்.

3 ஐந்து மூடுதிரைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.

4 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைசி ஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டாக்கு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரைகளின் ஓரத்திலும் அப்படியே செய்.

5 காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கு.

6 ஐம்பது பொன் கொக்கிகளை செய்து, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைக்கப்படவேண்டும். அப்பொழுது ஆசரிப்பு கூடாரம் ஒன்றாகும்.

7 “ஆசரிப்பு கூடாரத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டு ரோமத்தால் பதினொரு மூடுதிரைகளை உண்டாக்கு.

8 ஒவ்வொரு மூடுதிரைகளும் முப்பது முழ நீளமும், நான்கு முழ அகலமாக இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாக இருக்கவேண்டும்.

9 ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போடவேண்டும்.

10 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைசி ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,

11 ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்துவிடவேண்டும்.

12 கூடாரத்தின் மூடுதிரைகளில் மீதமான பாதிமூடுதிரை ஆசரிப்பு கூடாரத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும்.

13 கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்தில் மீதியானதில், இந்தப்பக்கத்தில் ஒரு முழமும் அந்தப்பக்கத்தில் ஒரு முழமும் ஆசரிப்பு கூடாரத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும்.

14 சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத் தோலால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் மெல்லிய தோலால் ஒரு மூடியையும் உண்டாக்கவேண்டும்.

15 “ஆசரிப்பு கூடாரத்திற்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கவேண்டும்.

16 ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாக இருக்கவேண்டும்.

17 ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் இரண்டு பொருந்தும் முனை இருக்கவேண்டும்; ஆசரிப்புக் கூடாரங்களில் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்யவேண்டும்.

18 ஆசரிப்புக் கூடாரத்திற்காக செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகைகள் தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கட்டும்.

19 அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டாக்கவேண்டும்; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.

20 ஆசரிப்பு கூடாரத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும்,

21 அவைகளின் கீழ் நாற்பது வெள்ளிப்பாதங்களையும் உண்டாக்கவேண்டும்; ஒரு பலகையின் கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.

22 ஆசரிப்பு கூடாரத்தின் மேற்குப்பக்கத்திற்கு ஆறு பலகைகளையும்,

23 ஆசரிப்பு கூடாரத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டாக்கவேண்டும்.

24 அவைகள் கீழே சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்கு ஆகும்.

25 அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும்.

26 “சீத்திம் மரத்தால் ஆசரிப்பு கூடாரத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,

27 ஆசரிப்பு கூடாரத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், ஆசரிப்பு கூடாரத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் செய்.

28 நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைவரை பலகைகளின் மையத்தில் ஊடுருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.

29 பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் செய்து, தாழ்ப்பாள்களைப் பொன் தகட்டால் மூடவேண்டும்.

30 இப்படியாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படி ஆசரிப்பு கூடாரத்தை அமைக்கவேண்டும்.

31 “இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு மூடுதிரையைச் செய்யவேண்டும்; அதிலே வேலைப்பாடு செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.

32 சீத்திம் மரத்தால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நான்கு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நான்கு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.

33 கொக்கிகளின்கீழே அந்த மூடுதிரையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே மூடுதிரைக்குள்ளாக வைக்கவேண்டும்; அந்த மூடுதிரை பரிசுத்த இடத்திற்கும் மகா பரிசுத்த இடத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.

34 மகா பரிசுத்த இடத்திலே சாட்சிப்பெட்டியின்மேல் கிருபாசனத்தை வைப்பாயாக;

35 மூடுதிரைக்கு வெளியே மேஜையையும், மேஜைக்கு எதிரே ஆசரிப்பு கூடாரத்தின் தென்பக்கமாகக் குத்துவிளக்கை வைத்து, மேஜையை வடபக்கமாக வைப்பாயாக.

36 இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்கு திரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,

37 அந்தத் தொங்கு திரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப்பாதங்களை வார்க்கவேண்டும்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Êxodo 26, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.