Amós 7

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் அறுவடையில் புல் முளைக்கத் தொடங்கும்போது அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.

2 அவைகள் தேசத்தின் புல்லைத் தின்று தீர்ந்தபோது, நான்: யெகோவாகிய ஆண்டவரே, மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுமையடைந்தான் என்றேன்.

3 யெகோவா அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.

4 யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் தோன்றினார்; அது மகா ஆழத்தை விழுங்கியது, அதில் ஒரு பங்கை விழுங்கி முடித்தது.

5 அப்பொழுது நான்: யெகோவாகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் மிகச் சிறியதானான் என்றேன்.

6 யெகோவா அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.

7 பின்பு அவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.

8 யெகோவா என்னை நோக்கி: ஆமோஸே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேல் என்னும் என்னுடைய மக்களின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.

9 ஈசாக்கின் மேடைகள் பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த இடங்கள் அழிக்கவும்படும்; நான் யெரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாகப் வாளோடு எழும்பிவருவேன் என்றார்.

10 அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு செய்கிறான்; தேசம் அவனுடைய வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது.

11 யெரொபெயாம் வாளால் சாவான் என்றும், இஸ்ரவேல் தன்னுடைய தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுவான் என்றும் ஆமோஸ் சொல்லுகிறான் என்று சொல்லச்சொன்னான்.

12 அமத்சியா ஆமோஸை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதா தேசத்திற்கு ஓடிப்போ, அங்கே அப்பம் சாப்பிட்டு, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு.

13 பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த இடமும் ராஜ்ஜியத்தின் அரண்மனையுமாக இருக்கிறது என்றான்.

14 ஆமோஸ் அமத்சியாவுக்குப் பதிலாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் மகனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பதனிடுகிறவனுமாக இருந்தேன்.

15 ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் யெகோவா அழைத்து, நீ போய் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று யெகோவா சொன்னார்.

16 இப்போதும், நீ யெகோவாவுடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தினருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.

17 இதனால் உன்னுடைய மனைவி நகரத்தில் விபசாரியாவாள்; உன்னுடைய மகன்களும் உன்னுடைய மகள்களும் வாளால் விழுவார்கள்; உன்னுடைய வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயோவென்றால் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன்னுடைய தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Amós 7, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.