2 Samuel 2

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 பின்பு தாவீது யெகோவாவை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்களில் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் யெகோவா: போ என்றார்; எந்த இடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார்.

2 அப்படியே தாவீது தன்னுடைய இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊரைச் சேர்ந்த அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊரைச் சேர்ந்த அபிகாயிலோடும் அந்த இடத்திற்குப் போனான்.

3 மேலும், தன்னோடு இருந்த மனிதர்களையும், அவர்கள் குடும்பங்களையும் கூட்டிக்கொண்டுபோனான்; அவர்கள் எப்ரோனின் நகரங்களில் குடியேறினார்கள்.

4 அப்பொழுது யூதாவின் மனிதர்கள் வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தார்களின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள். சவுலை அடக்கம்செய்தவர்கள் கீலேயாத்தேசத்து யாபேசின் மனிதர்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்தபோது.

5 தாவீது கீலேயாத்தேசத்து யாபேசின் மனிதர்களிடம் தூதுவர்களை அனுப்பி, நீங்கள் உங்களுடைய ஆண்டவனான சவுலுக்கு இந்த தயவைச் செய்து, அவரை அடக்கம்செய்ததால், யெகோவா உங்களை ஆசீர்வதிப்பாராக.

6 யெகோவா உங்களைக் கிருபையும் உண்மையுமாக நடத்துவாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியால், நானும் இந்த நன்மைக்கு ஏற்றபடி உங்களை நடத்துவேன்.

7 இப்பொழுதும் நீங்கள் உங்களுடைய கைகளை பெலப்படுத்திக்கொண்டு தைரியமாக இருங்கள்; உங்களுடைய ஆண்டவனான சவுல் இறந்த பின்பு, யூதா வம்சத்தார்கள் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.

8 சவுலின் படைத்தலைவனான நேரின் மகனான அப்னேர், சவுலின் மகனான இஸ்போசேத்தை மகனாயீமுக்கு அழைத்துக்கொண்டுபோய்,

9 அவனைக் கீலேயாத்தின்மேலும், அஷூரியர்கள்மேலும், யெஸ்ரயேலின்மேலும், எப்பிராயீமின்மேலும், பென்யமீனின்மேலும், இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாக்கினான்.

10 சவுலின் மகனான இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிறபோது, 40 வயதாக இருந்தான்; அவன் இரண்டுவருடங்கள் ஆட்சி செய்தான்; யூதா கோத்திரத்தார்கள் மட்டும் தாவீதைப் பின்பற்றினார்கள்.

11 தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாக இருந்த நாட்களின் எண்ணிக்கை ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும் ஆகும்.

12 நேரின் மகனான அப்னேர் சவுலின் மகனான இஸ்போசேத்தின் வீரர்களைக் கூட்டிக்கொண்டு, மகனாயீமிலிருந்து கிபியோனுக்குப் புறப்பட்டுப் போனான்.

13 அப்பொழுது செருயாளின் மகனான யோவாபும் தாவீதின் வீரர்களும் புறப்பட்டுப்போய், கிபியோனின் குளத்தின் அருகில் ஒருவருக்கு ஒருவர் சந்தித்து, குளத்திற்கு அந்தப்பக்கத்தில் அவர்களும், குளத்திற்கு இந்தப்பக்கத்தில் இவர்களும் இறங்கினார்கள்.

14 அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர்கள் எழுந்து, நமக்கு முன்பாகச் சண்டையிடட்டும் என்றான். அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து, அப்படிச் செய்யட்டும் என்றான்.

15 அப்பொழுது சவுலின் மகனான இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனிதர்களில் பன்னிரெண்டுபேர்களும், தாவீதுடைய வீரர்களிலே பன்னிரெண்டுபேர்களும், எழுந்து ஒரு பக்கமாகப் போய்,

16 ஒருவர் தலையை ஒருவர் பிடித்து, ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி, ஒன்றாக விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த இடம் எல்காத் அசூரிம் எனப்பட்டது.

17 அந்த நாளில் மிகவும் கடுமையான யுத்தமாகி, அப்னேரும் இஸ்ரவேல் மனிதர்களும் தாவீதின் வீரர்களால் முறியடிக்கப்பட்டார்கள்.

18 அங்கே செருயாவின் மூன்று மகன்களான யோவாபும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் காட்டுமான்களில் ஒன்றைப்போல வேகமாக ஓடுகிறவனாக இருந்தான்.

19 அவன் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறமாவது இடதுபுறமாவது, அவனைவிட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்.

20 அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான். அவன்: நான்தான் என்றான்.

21 அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலதுபக்கத்திலோ இடதுபக்கத்திலோ விலகி, வாலிபர்களில் ஒருவனைப் பிடித்து அவனுடைய ஆயுதங்களை எடுத்துக்கொள் என்றான்; ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்.

22 பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ; நான் உன்னை ஏன் தரையில் விழ வெட்டவேண்டும்? பின்பு உன்னுடைய சகோதரனான யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான்.

23 ஆனாலும் அவன் விலகிப்போகமாட்டேன் என்றபடியால், அப்னேர் அவனை ஈட்டியின் பின்புற மழுங்கிய முனையால் அவனுடைய வயிற்றிலே குத்தினான்; ஈட்டி மறுபக்கத்தில் வந்தது; அவன் அங்கேயே விழுந்து இறந்தான்; ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் அங்கேயே நின்றார்கள்.

24 யோவாபும் அபிசாயும் சூரியன் மறையும்வரை அப்னேரைப் பின்தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்திர வழிக்கு அருகில் இருக்கிற கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுவரை வந்தார்கள்.

25 அப்பொழுது அப்னேருக்குப் பின்சென்ற பென்யமீன் மனிதர்கள் ஒரே படையாகக் கூடி, ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள்.

26 அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு, பட்டயம் எப்போதும் அழித்துக்கொண்டிருக்கவேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று தெரியாதோ, தங்களுடைய சகோதரர்களைவிட்டுப் பின்வாங்கும்படி எதுவரைக்கும் மக்களுக்குச் சொல்லாமல் இருப்பீர் என்றான்.

27 அதற்கு யோவாப்: இன்று காலையில் நீர் பேசாமல் இருந்திருந்தால் மக்கள் அவரவர்கள் தங்களுடைய சகோதரர்களைப் பின்தொடராமல், அப்போதே திரும்பியிருப்பார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

28 யோவாப் எக்காளம் ஊதினான்; அப்பொழுது மக்கள் அனைவரும் இஸ்ரவேலைப் பின்தொடராமலும், யுத்தம்செய்யாமலும் நின்றுவிட்டார்கள்.

29 அன்று இரவு முழுவதும் அப்னேரும் அவனுடைய மனிதர்களும் பாலைவனம் வழியாகப் போய், யோர்தானைக் கடந்து, பித்ரோன் வழியே சென்று அதைக் கடந்து, மகனாயீமுக்குப் போனார்கள்.

30 யோவாப் அப்னேரைப் பின்தொடராமல் மக்களையெல்லாம் கூடிவரச்செய்தான்; தாவீதின் வீரர்களில் 19 பேர்களும் ஆசகேலும் குறைந்திருந்தார்கள்.

31 தாவீதின் வீரர்களோ பென்யமீனியர்களிலும், அப்னேரின் மனிதர்களிலும், 360 பேரைக் கொன்றிருந்தார்கள்.

32 அவர்கள் ஆசகேலை எடுத்து, பெத்லெகேமிலுள்ள அவனுடைய தகப்பனுடைய கல்லறையில் அவனை அடக்கம்செய்தார்கள்; யோவாபும் அவனுடைய மனிதர்களும் இரவு முழுவதும் நடந்து, பொழுது விடியும்போது எப்ரோனிற்கு வந்துசேர்ந்தார்கள்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 2 Samuel 2, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.