2 Reis 21

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; அவனுடைய தாயின் பெயர் எப்சிபாள்.

2 யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே, அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து,

3 தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளை வணங்கினான்.

4 எருசலேமிலே என் நாமத்தை விளங்கச்செய்வேன் என்று யெகோவா சொல்லிக் குறித்த யெகோவாவுடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி,

5 யெகோவவுடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி,

6 தன் மகனைப் பலியாக அக்கினியில் சுட்டெரித்து, நாள் நட்சத்திரம் பார்க்கிறவனுமாயிருந்து, ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாகச் செய்தான்.

7 இந்த ஆலயத்திலும், நான் இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் பெயரை என்றைக்கும் விளங்கச் செய்வேன் என்று யெகோவ தாவீதோடும் அவனுடைய மகனாகிய சாலொமோனோடும் சொல்லி குறித்த ஆலயத்திலே அவன் செய்த தோப்புவிக்கிரகத்தை வைத்தான்.

8 நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாக இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த தேசத்தை விட்டு அலையச் செய்வதில்லை என்று சொல்லியிருந்தார்.

9 ஆனாலும் அவர்கள் கேட்காமல்போனார்கள்; யெகோவ இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக அழித்த மக்கள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாகச் செய்ய மனாசே அவர்களைத் தூண்டிவிட்டான்.

10 ஆகையால் யெகோவா தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களைக் கொண்டு உரைத்தது:

11 யூதாவின் ராஜாவாகிய மனாசே தனக்கு முன்னிருந்த எமோரியர்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் கேடாக இந்த அருவருப்புகளைச் செய்து, தன் அருவருப்பான சிலைகளால் யூதாவையும் பாவம் செய்யவைத்ததால்,

12 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவ சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, கேட்கப்போகிற யாவருடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்படியான பொல்லாப்பை நான் எருசலேமின்மேலும், யூதாவின்மேலும் வரச்செய்து,

13 எருசலேமின்மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன்; ஒருவன் ஒரு தட்டைத் துடைத்து, பின்பு அதைக் கவிழ்த்துவைக்கிறதுபோல எருசலேமைத் துடைத்துவிடுவேன்.

14 அவர்கள் தங்களுடைய முன்னோர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, என்னைக் கோபப்படுத்தி வந்ததால், என் சுதந்தரத்தில் மீதியானதைக் கைவிட்டு, அவர்கள் எதிரிகளின் கையில் அவர்களை ஒப்புக்கொடுப்பேன்.

15 தங்கள் பகைஞர்களுக்கெல்லாம் கொள்ளையும் சூறையுமாகப் போவார்கள் என்றார்.

16 யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படியாக, மனாசே யூதாவைப் பாவம்செய்யவைத்த அந்தப் பாவமும் தவிர, அவன் எருசலேமை நான்கு மூலைகள்வரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாக, குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான்.

17 மனாசேயின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவன் செய்த பாவமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

18 மனாசே இறந்தபின், அவன் ஊசாவின் தோட்டமாகிய தன் அரண்மனைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ஆமோன் ராஜாவானான்.

19 ஆமோன் ராஜாவானபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; யோத்பா ஊரானாகிய ஆரூத்சின் மகளான அவனுடைய தாயின் பெயர் மெசுல்லேமேத்.

20 அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து,

21 தன் தகப்பன் நடந்த எல்லா வழியிலும் நடந்து, தன் தகப்பன் சேவித்த அருவருப்பான சிலைகளை வணங்கி அவைகளைப் பணிந்துகொண்டு,

22 யெகோவாவின் வழியிலே நடவாமல், தன் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டான்.

23 ஆமோனின் ஊழியக்காரர்கள் அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, ராஜாவை அவன் அரண்மனையிலே கொன்றுபோட்டார்கள்.

24 அதினால் தேசத்து மக்கள் ராஜாவாகிய ஆமோனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டியவர்களையெல்லாம் வெட்டிப்போட்டு, அவன் மகனாகிய யோசியாவை அவனுடைய இடத்தில் ராஜாவாக்கினார்கள்.

25 ஆமோன் செய்த மற்ற செயல்பாடுகள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

26 அவன் ஊசாவின் தோட்டத்திலுள்ள அவனுடைய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்; அவன் இடத்திலே அவனுடைய மகனாகிய யோசியா ராஜாவானான்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 2 Reis 21, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.