1 Reis 9

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017)

1 சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்தையும் ராஜ அரண்மனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு,

2 யெகோவா கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாவது முறையும் அவனுக்குத் தரிசனமானார்.

3 யெகோவா அவனை நோக்கி: நீ என்னுடைய சமுகத்தில் செய்த உன்னுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என்னுடைய நாமம் என்றைக்கும் வெளிப்படும்படி, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என்னுடைய கண்களும், இருதயமும் எப்பொழுதும் அங்கே இருக்கும்.

4 நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என்னுடைய கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளும்படி, என்னுடைய சமுகத்தில் மன உத்தமமும் செம்மையுமாக உன்னுடைய தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடந்தால்,

5 இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்காரும் ஆண்மகன் உனக்கு இல்லாமல் போவதில்லை என்று உன்னுடைய தகப்பனாகிய தாவீதோடு நான் சொன்னபடியே, இஸ்ரவேலின் மேலுள்ள உன்னுடைய ராஜ்ஜியபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கச்செய்வேன்.

6 நீங்களும் உங்களுடைய பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்னே வைத்த என்னுடைய கற்பனைகளையும், கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறு தெய்வங்களை வணங்கி, அவைகளைப் பணிந்துகொண்டால்,

7 நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே அவர்களை வைக்காதபடி அழித்துப்போட்டு, என்னுடைய நாமம் வெளிப்பட நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என்னுடைய பார்வையைவிட்டு அகற்றுவேன்; அப்பொழுது இஸ்ரவேல் என்கிற பெயர் எல்லா மக்கள் மத்தியிலும் பழமொழியாகவும் நகைப்பாகவும் இருப்பார்கள்.

8 அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்து போகிறவன் எவனும் பிரமித்து, இழிவாகப் பேசி: யெகோவா இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.

9 அதற்கு அவர்கள்: தங்கள் முன்னோர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த தங்களுடைய தேவனாகிய யெகோவாவை விட்டு வேறு தெய்வங்களைப் பற்றிக்கொண்டு, அவர்களை வணங்கி தொழுதபடியால், யெகோவா இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரச்செய்தார் என்று சொல்லுவார்கள் என்றார்.

10 சாலொமோன் யெகோவாவுடைய ஆலயமும் ராஜ அரண்மனையுமாகிய இரண்டு மாளிகைகளையும் கட்டி நிறைவேற்றுகிற 20 ஆம் வருடம் முடிவிலே,

11 தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாருமரங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள 20 பட்டணங்களைக் கொடுத்தான்.

12 ஈராம் தனக்கு சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்ப்பதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டு வந்தான்; அவைகளின்மேல் அவன் பிரியப்படவில்லை.

13 அதனாலே அவன்: என்னுடைய சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்த நாள்வரை சொல்லி வருகிறபடி காபூல் நாடு என்று பெயரிட்டான்.

14 ஈராம் ராஜாவிற்கு நூற்றிருபது தாலந்து பொன் அனுப்பியிருந்தான்.

15 பிடித்த கூலியில்லா வேலையாட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் யெகோவாவுடைய ஆலயத்தையும், தன்னுடைய அரண்மனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்.

16 கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர் பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியர்களைக் கொன்றுபோட்டு, அதை சாலொமோனின் மனைவியாகிய தன்னுடைய மகளுக்கு சீதனமாகக் கொடுத்திருந்தான்.

17 சாலொமோன் அந்தக் கேசேர் பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்,

18 பாலாத்தையும், வனாந்திரத்திலுள்ள தாமாரையும்,

19 தனக்கு இருக்கிற எல்லாவற்றையும் சேமித்துவைக்கும் எல்லாப் பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் பட்டணங்களையும், குதிரை வீரர்கள் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும், தான் அரசாட்சி செய்த தேசமெங்கும் தனக்கு விருப்பமானதையெல்லாம் கட்டினான்.

20 இஸ்ரவேல் மக்கள் அழிக்காமல் மீதியாக விட்டிருந்த இஸ்ரவேல் மக்களல்லாத எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களுமான எல்லா மக்களிலும்,

21 அவர்களுக்குப் பிறகு தேசத்தில் மீதியாக இருந்த எல்லா மக்களுடைய பிள்ளைகளையும், சாலொமோன் இந்த நாள்வரைக்கும் நடக்கிறதுபோல, கூலியில்லாமல் வேலைசெய்ய அடிமைப்படுத்திக்கொண்டான்.

22 இஸ்ரவேல் மக்களில் ஒருவரையும் சாலொமோன் அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்தவீரர்களும், அவனுக்குப் பணிவிடைக்காரர்களும், பிரபுக்களும், படைத்தலைவர்களும், இரதவீரர்களும், குதிரைவீரர்களுமாக இருந்தார்கள்.

23 550 பேர் சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களைக் கண்காணிப்பதற்குத் தலைமையான விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்.

24 பார்வோனின் மகள், தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன்னுடைய மாளிகையிலே குடிவந்தாள்; அப்பொழுது மில்லோ பட்டணத்தைக் கட்டினான்.

25 சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டி முடித்தபின்பு, அவருக்குக் கட்டின பலிபீடத்தின்மேல் ஒரு வருடத்தில் மூன்றுமுறை சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, யெகோவாவின் சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தின்மேல் தூபம் காட்டிவந்தான்.

26 ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் செங்கடலின் கரையிலே ஏலாத்திற்கு அருகிலுள்ள எசியோன் கேபேரிலே கப்பல்களைச் செய்தான்.

27 அந்தக் கப்பல்களில், கடல் பயணத்தில் பழகின கப்பலாட்களாகிய தன்னுடைய வேலைக்காரர்களை ஈராம் சாலொமோனுடைய வேலைக்காரர்களோடு அனுப்பினான்.

28 அவர்கள் ஓப்பீருக்குப்போய், அந்த இடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடம் கொண்டுவந்தார்கள்.

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 1 Reis 9, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.